Search This Blog

Friday, November 26, 2010

தேவதை

எப்போதும் என் வாழ்வில் தேவதைகளுக்கு குறைவில்லை :-) எப்போதோ வந்துபோன ஒரு தேவதையைப்பற்றிய என் நினைவுகள். என் கல்லூரி நாட்களில் எழுதியது உங்கள் பார்வைக்கு..



தென்றலுடன்
பரஸ்பர நலம் விசாரிப்புகளும்
தழுவல்களுமாய் ஆரம்பித்தது
என் காலை  பயணம்..

ஓரிடத்தில் தென்றல் கேட்டது
"தேவதையை பார்த்திருக்கிறாயா?"

"இல்லை" என்றேன்...
"கண்மூடி சுவாசி" என்று கட்டளையிட்டது தென்றல்

கண்மூடி சுவாசித்தேன்
சுவா..சித்..தேன்......

வாசம்!
இனம்புரியாத வாசம்...
தென்றலுடன் மிதந்து வரும் 
தேவதையின் வாசம்...

வாசம் வரும் திசையில்
நடக்க ஆரம்பித்தேன்

ஓரிடத்தில் ஒரு பெண்
பனித்துளியை முத்தமிட்டுக்கொண்டிருந்தாள்?!!
"இவள்தான் தேவதை"
என காதுக்குள் கிசுகிசுத்தது தென்றல்

இதென்ன ஆச்சர்யம்
சூரியன் வந்துதான் பூக்கள் மலரும்
இங்கு நிலவு வந்து பூக்களை எழுப்புகின்றதே??!!

பனித்துளியை
முத்தமிட்டுக்கொண்டிருந்த தேவதை
அரவம் கேட்டு
என் பக்கம் திரும்பினாள்

மின்னல்கள் உருவாகும் இடத்தை
அப்பொழுதுதான் கண்டுபிடித்தேன்

அவள் புன்னகையில் ...

அவள் முன் மண்டியிட்டு
அன்புடன்
அவள் கரங்களில்
முத்தமிட்டேன்

அப்பப்பா,
ஒரு நிலவுக்குள்
இருபது பிறைகளா!!

நான் முத்தமிட்டதால்
கரத்துடன் சேர்ந்து அவள் முகமும் சிவந்தது..
"வரம் கேள்"  "வரம் கேள்" என உசுப்பியது தென்றல்

"என்ன வேண்டும்?" என்றாள்
ஒரு புன்னகையோடு
சுட்டுவிரலால் சுட்டினேன்
நீதான் வேண்டுமென ...

"எனக்கு கடவுளுடன் நிச்சயமாகிவிட்டது "
என்றாள் விரக்தியுடன்

"எப்படி?"

"பெற்றோர் ஏற்பாடு"


அப்போதுதான் தெரிந்து
பல நாத்திகர்கள்
உருவாகும் காரணம்.

கலங்கிய என் விழிகளை கண்டவுடன் கேட்டாள்

"வேறதுவும்?"

"நீ அன்றாடம் முத்தமிடும் பனித்துளியாகவேண்டும் "
"சூரியன் வந்தால் மறைந்து போவாய்"

"உன் பாதம்படும் புற்களாகவாது ?"


"தேவதைகள்  நடந்து வருவதில்லை"

"இந்த மலர்களகவாது?"

"இது நித்தம் வாடுபவை"

"வாடினேன்"

"சரி மறுஜென்மம் வரையில்
இங்கு எங்காவது என்னை புதைத்து விடு
அதற்கு முன்
ஒரே ஒரு முறை
என்னை முத்தமிடு "

அவள் விழிகளில்
இரண்டு சொட்டு கண்ணீர்

மெதுவாக மிதந்து வந்தாள்

கண்மூடி என் இதழோடு

இதழ் பதிக்கும்
நேரத்தில்

"எழுந்திரிடா, நேரமாச்சு"
என்று அம்மாவின் குரல்.
"அடச்சே, கனவு"
என
முனகிக்கொண்டே எழுந்தேன் நான்


ஆனால்
என் அறை முழுவதும்
வாசம்
தேவதையின் வாசம்
தென்றலுடன் மிதந்து வரும் தேவதையின் வாசம்
யாரோ என் காதில் கிசுகிசுத்தார்கள்
"தேவதை"  என

Wednesday, October 27, 2010

வீட்டிற்குள் வரும் விபச்சாரம்

கொஞ்சம் இடைவெளி, மன்னிக்கவும், 
எனக்கு கொஞ்சம் வயசு ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன். சில விசயங்கள பார்க்கும்போதோ கேட்கும்போதோ கொஞ்சமா ரத்த அழுத்தம் அதிகமாகுது... அது என்ன விஷயம் எப்ப அப்படி ஆகுதுன்னு என் நண்பன்கிட்ட சொன்னா, என்னப்பாத்து ரொம்ப கேவலமா சிரிக்கிறான்.
உங்ககிடேயும் சொல்லுறேன் நீங்களே சொல்லுங்க எனக்கு வயசு ஆகிடுச்ச இல்ல நான் இன்னும் வளருனுமான்னு??

இப்ப வருகின்ற விளம்பரங்கள் ரொம்ப சக்திமிகுந்ததாக இருக்கிறது. ஒரு சில நொடிகளில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிறந்த கற்பனைத்திறன் மிகுந்த விளம்பரங்கள் பல. விளம்பரங்கள் பொதுவாக எந்த முன்னறிவுப்பும் இல்லாமல் வீட்டின் முன்னறை வரை ஆரம்பித்து பலகாலமாகிவிட்டது. தாத்தா பாட்டியிலிருந்து பேரன் வரைக்கும் எல்லோருக்கும் தொலைகாட்சி என்பது இரண்டாவது உலகம். எந்த குழந்தையும் பாட்டியிடம் கதைகேட்க விரும்புவதில்லை எந்த பாட்டிக்கும் அதற்க்கு நேரம் இல்லை. குழந்தையின் உலகம் cartoon network -லும் பாட்டியின்  உலகம் தெற்கத்தி பெண்ணிலும் ஒன்றிபோய் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பெரும்பாலும் குழந்தைக்கான அளவுகோல் வயது குறைந்துகொண்டே வருகிறது. நான் ஆறாவது படிக்கும் வரையில் சாலையை கடந்து பள்ளிக்கு விட்டு வருவார்கள் என் அம்மா.
இன்றோ இரண்டாவது படிக்கும் என் அண்ணன் மகளுக்கு எல்லா தொலைகாட்சி பாடல்களும் பாடத்தெரியும். தொடர்களில் வரும் கதாப்பாத்திரங்கள் முதற்கொண்டு பேசுகிறாள். cartoon network மறந்து வெகுநாட்களாகிவிட்டது.

சமீபகாலமாக வரும் சில விளம்பரங்கள் எதிர்மறை தாக்கத்தையே எனக்கு ஏற்படுத்துகிறது.

 சிலநாட்கள் வரை சில படங்கள் சில திரையரங்குகளில் 11 காட்சியாக மட்டுமே ஓடிகொண்டிருந்து.அவற்றின் விளம்பரங்களில் கூட அதற்கான தணிக்கை சான்றிதல் மற்றும் வயது வரம்பு குறிப்பிடப்பட்டிருக்கும். தேவையானவர்கள் தங்கள் தேவைக்காக சென்றுவரும் இடமாக இருந்தது. இப்போது அதற்கான அவசியம் இல்லாமலே போய்விட்டது.எல்லாவற்றையும் MMS களும் Internet -மே கவனித்துகொள்கிறது என்று சாக்கு சொல்லலாம், விபச்சாரம் பழமையான தொழில்தான் அதற்காக யாரும் வீட்டிற்க்குள் அனுமதிப்பதில்லை.
ஆனால் இப்போது வரும் விளம்பரங்களோ எந்த முன்னறிவுப்பும் இல்லாமலே உங்கள்  வீட்டு வரவேற்பு அறை முதல் படுக்கை அறை வரை வருகைத்தருகிறது.
கீழ்க்கண்ட விளம்பரங்கள் சில எடுத்துகாட்டு.(எனக்கு அந்த அசிங்கத்தை என் பக்கத்தில் ஒளிபரப்புவதில் விருப்பமில்லை)

1 . Wild Stone deodorant .
2 . 18 + .
3 . FastTrack bags.
4 . Vivel soap (Dull Divya).

ஒரு காலத்தில் ஆணுறை விளம்பரங்கள் கூட கண்ணியமாக வந்துகொண்டிருந்து. ஆனால் இப்போதோ அடுத்தவன் பொண்டாட்டி அதுவும் அண்ணன் பொண்டாட்டி  சாதாரண வாசனை திரவியத்தில் மயங்கி கண்டவனுடன் சோரம் போவதை 5 மணித்துளிக்கு (minutes) ஒருமுறை காட்டிகொண்டிருகிறார்கள் அதுவும் எல்லோரும் பார்க்கும் திரைப்படத்திற்கு இடையிலும் செய்திகளுக்கு நடுவேயும். 

இன்னொரு விளம்பரம், பைக்காக (bags) இதில் ஒன்றில் தன் காதலி இருக்கும்போதே இன்னொருத்தியோடு இருப்பதை காட்டுகிறார்கள். காதலியோ தன் காதலனோடு வரிசையில் நிற்கும்போதே இன்னொருவனுக்கு கண் காண்பிக்கிறாள். மக்களே சாதாரண பைக்கும் இதற்கும் என்னங்க சம்மந்தம்.??

இது பரவயில்லைங்க ஏதோ வேற நாட்டு விளம்பரமாதிரி இருக்கு.  இந்த சோப்பு விளம்பரம் ரொம்ப அதிகம். நம்ம திரிஷா முதற்கொண்டு எல்லாரும் ஒரு பொண்ண ஓட்றாங்க. ஏற்கனவே நம்ம ஆளுங்களுக்கு கருப்புன்னா கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை அதிகம்.அதுவுமில்லாம எல்லா கல்லூரியிலும் ராகிங் பிரச்சினை வேறு.
சும்மாவே நம்ம பசங்க ஆடுவாங்க இதுல இவங்க வேற சலங்க கட்டிவிடறாங்க.
என் நண்பன் மருது என்கிட்டே அடிக்கடி சொல்லற ஒரு விஷயம் "மச்சி, கருப்பு என்பது நிறமல்ல அது ஒரு வரம்"  நண்பர்களே இதையே நானும் உங்களுக்கு சொல்லுறேன்.

ஆகவே மக்களே இவங்களுக்கு கொஞ்சம் கூட உங்களையும் என்னையும் பற்றி கவலை இல்லை. அவர்கள் பணத்திற்காக விற்பனைக்காக விபச்சாரம் கூட செய்வார்கள் அல்லது ஒளிபரப்புவார்கள், நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? குடும்பத்தோடு கடலை சாப்பிட்டுக்கொண்டு  ரசிக்க போகிறிர்களா??

இதைதான் என் நண்பனிடம் சொன்னதற்கு, "நீ ரொம்ப வளரனும் தம்பி " அப்படின்னு சொன்னான். மற்றொருவனோ "உனக்கு வயசாயிடுச்சு டா" அப்படிங்கிறான்.

நீங்களே சொல்லுங்க நான் இப்ப என்ன செய்ய ??

Thursday, October 7, 2010

தனிமை

 எப்போதோ எல்லோரும் இருந்தும் யாரும் இல்லாத ஒரு தனிமையின் கணத்தை இதயம் அனுபவித்தபோது தோன்றியது,




உருவகப்படுத்த முடியாத கவிதையாய்
உறங்கிக்கிடக்கிறது  என் தனிமை
கடந்து செல்லும் யாரோ ஒருவரின் பின்னால்
 எதையோ தேடி ஓடும் நாய்குட்டியாய்

விரவிக்கிடகின்ற நட்சத்திரங்களுக்கு நடுவே
ஒற்றை நிலவாய்
என் தனிமை ...

பகிர்தலை தட்டி செல்லும் சக மனிதர்களை விடுத்தது
கர்பகிரக கடவுளாய்
மௌனியாய்
நானும் என் தனிமையும்
ஒரு பகிர்தலை  நோக்கி காத்திருக்கிறோம்...

                                                                                  ~யோகு 

 

Monday, October 4, 2010

தகப்பன் சாமி

                                   MNC -ல் முதல் மாதம் சம்பளம் வாங்கி, அம்மா  வேண்டிக்கொண்டிருந்த எல்லா சாமிகளுக்கும் வேண்டுதல் நிறைவேற்றிய பின்னர், என் தந்தையை பார்க்கும்போது தோன்றியது ...



Friday, October 1, 2010

கண்டிப்பாக பார்க்கக்கூடாத படம்


நேற்று இரவு கே டிவி அலைவரிசையில் "எவனோ ஒருவன்" திரைப்படம் ஓடிக்கொண்டிருந்து. எந்த சேனலை மாற்றினாலும் வேறு நல்ல நிகழ்ச்சிகள் இல்லாத காரணத்தால்  (என்னிக்கு இருந்துச்சு  ??) அந்தப்படதையே பார்க்க வேண்டியதாயிற்று.
முன்னரே பார்த்தப்படம்தான் என்றாலும் வேறு வழியின்றி அதை பார்த்தேன்.

என்னைப்போல் ஒரு சாதாரணமானவன் இந்த சமுதாயத்தை பார்த்துப்படுகின்ற கோபமே இப்படம்.
இது " Dombivli Fast " என்ற மராட்டி படத்தின்  மறுஆக்கம். தமிழிலும் இயக்கியிருப்பவர் நிஷிகாந்த் காமத் (Nishikanth Kamat ).வசனம் நம் மாதவன். நம்மால் சரியாக அங்கீகரிக்கப்படாத அல்லது அங்கீகரிக்க முடியாத சிறந்தப்படங்களில் ஒன்று.

2007 -ல்  வெளிவந்த இப்படத்தை மூத்தப்பதிவர்கள் பலர் பல்வேறு கோணங்களில் எழுதியிருக்கலாம்..  இது  என் உணர்வுகளின் பகிர்வு.

ஒரு சாதாரண மனிதனின் கதை இது. ஒரு அளவான குடுமபத்தின் தலைவன் ஸ்ரீதர் வாசுதேவன. அவன் மனைவி வத்சலா மற்றும் அவன் இரு குழந்தைகள். சாதாரண நடுத்தர வர்க்கம். அவன் செய்யும் ஒரே தவறு அவன் நேர்மை. நாம் என்ன இதிகாச காலத்திலேய  வாழ்கின்றோம் எல்லோரும் நல்லவர்களாக  இருப்பதற்கு??...
நடைமுறை தெரியாத முட்டாள்.அவனின் நேர்மை எல்லோருக்கும் பிரச்சினையாய் இருக்கிறது.

கடையில் பொருள் வாங்கிவிட்டு கொடுக்கின்றப்பணத்திற்கு  கணக்கு கேட்பது நம்  சாதாரண உரிமை. அதற்காக அவன் நடத்தப்படும் விதம் புதிதில்லை. அவனின் உரிமையை மறுப்பது எவனோ ஒருவன் அல்ல நம் சக மனிதன்தான், கடைக்காரன்.
அவன் உரிமைக்கான போராட்டம் அவனின் சக மனிதர்களாலேயே அங்கீகரிக்கப்படவில்லை. அதற்கு நீங்களும் நானும் சேர்ந்து கொடுத்தப்பரிசு மரணம்.


இப்படத்தில் குறிப்பிட வேண்டியதில் ஒன்று இதன் வசனம் (நம் மாதவன் ). சிறந்த வசனங்கள்.
இப்படத்தில் வரும் ஒரு வசனம்  சீமான் தன சக காவலரிடம் சொல்வதாக  அமையும்,
"இவன  மாதிரி ஆளுங்களெல்லாம் தப்பு பண்ண ஆரம்பிச்சுட்டா" என்று வரும். இதில் 
மாதவனின் உடல்மொழி( body language )  மிகவும் அருமை. நடுத்தர வர்கத்தின் இயலாமையையும் கோபத்தையையும் அருமையாக பிரதிபலித்திருப்பார்.


நாம் இங்கு உரிமைக்காக ஆயுதம் ஏந்த வேண்டியதில்லை, நம் உரிமையை கேட்ககூடமாட்டேன் என்கின்றோம். உரிமை மறுக்கப்படுவது பிரச்சினையில்லை. இயலாமைதான் இங்கு பிரச்சனை. நம் உரிமையை நாமே ஒத்துக்கொள்ளமாட்டேன்  என்கின்றோம். நாகரீகம் என்பது அமைதியாகச செல்வதில் இல்லை , தங்கள் உரிமையை கேட்பதில்தான்  இருக்கிறது என்பது எத்தனை மனிதனுக்கு தெரியும்.


நாம் எல்லோரும் சாக்கடையிலே வாழப்பழகிவிட்டோம் அதிலேயே அசிங்கம் செய்துகொண்டு... கேட்டால் அரசியல்வாதிகள் சரியில்லை அல்லது அதிகாரிகள் சரியில்லை என்பார்கள். பண்ணும் அசிங்கம் எல்லாம் நீயும் நானும் சேர்ந்து பண்ணுவது.
என்னை இத படத்தை முழுவதுமாக பார்க்க முடியவில்லை.. அது குற்றவுணர்வால இல்லை ஆத்திரமா என்று தெரியவில்லை. 

ஆகவே மக்களே தயவுசெய்து இப்படத்தை பார்காதிர் இல்லை  பார்க்கும் முன் உப்பு காரம் குறைத்து சாப்பிடவும். தப்பித்தவறி மானமும் கோபமும் வந்துவிடப்போகின்றது.











Thursday, September 30, 2010

நீயும் நானும்

மங்களகரமாக என் முதல் பதிவு.
எப்போதோ யாரிடமோ பேசிக்கொண்டிருக்கும்போது தோன்றியது. யாரிடம் என்று ஞபகம் இல்லை (சொல்ல முடியாது :P ) ஆனால் அது ஆண் இல்லை.


நன்றி